Tragedy pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல்: குடும்பப் பிரச்னை காரணமாக இரு மகள்களுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!

webteam

செய்தியாளர்: அஜ்மீர் ராஜா

திண்டுக்கல் அருகே உள்ள கள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன் - மேனகா தம்பதியர். இவர்களுக்கு, ஹிந்துவாஹினி (16), தானியஸ்ரீ (12) ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சீனிவாசன் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வீட்டிற்கு செல்லாத சீனிவாசன், நேற்று தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

Dindigul GH

அப்போது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதையடுத்து ஜன்னலை திறந்து பார்த்த சீனிவாசனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் மனைவி மற்றும் இரண்டு மகள்களும் தற்கொலை செய்து உயிரை மாய்த்திருந்தனர். இதைக்கண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாடிக்கொம்பு போலீசார், மூன்று உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்னை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மேனகா தனது இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.