Fraud PT Desk
தமிழ்நாடு

‘லிங்கை தொட்டா பணம் வருமா?’ - SMS மூலம் ரூ 1 லட்சம் மோசடி! சைபர் கிரைம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

PT WEB

என்ன நடந்தது?

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அஞ்சாருவார்த்தலை பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (49). கடந்த 11ஆம் தேதி அன்று, இவரது கைபேசி எண்ணிற்கு, 'உங்களது Credit card- க்கு வந்துள்ள Reward Point-ஐ பணமாக மாற்ற, கீழ்க்கண்ட Link-ஐ தொடவும்' என்று SMS வந்துள்ளது. அதை நம்பிய இவரும் Link-ஐ தொட்டுள்ளார். அவ்வாறு தொட்டவுடன், அது சம்மந்தமாக அவரது User ID மற்றும் Password ஆகியவைக் கேட்கப்பட்டுள்ளது. இவரும் தனது Reward Point-ஐ பணமாக பெறும் ஆர்வத்தில், தன்னுடைய Axis bank Credit card சம்பந்தமான அனைத்து விவரங்களையும் அது தொடர்பாக வந்த OTP எண்ணையும், அதில் கேட்டபடி பதிவிட்டுள்ளார்.

mobile theft

அதன் பிறகு, அவருக்கு Reward Point க்கான பணம் வரவு வைக்கப்படுவதற்கு பதிலாக, அவருடைய Axis bank Credit card-ஐ பயன்படுத்தி, மேற்படி மோசடி நபர்கள், Relaince Retail Shoping மூலம், ரு.1,02,800/- அளவிற்கு பொருள் வாங்கியதாக SMS வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சைபர் குற்றம் நடந்தால் உடனடியாக புகார் அளிக்க மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்ததால், உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்திருந்தார்.

உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறை!

இந்தப் புகாரானது, மயிலாடுதுறை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில் தஞ்சாவூர் சரக காவல் துணைத் தலைவர் திரு. ஜியாவுல் ஹக் IPS மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோரின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சைபர் கிரைம் பிரிவு மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சிவசங்கர் தலைமையிலான, காவல் ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்ட காவல் அலுவலர்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட Axis bank மேனேஜர் மற்றும் Relaince Retail Shop நோடல் அதிகாரி ஆகியோருக்கு, இ- மெயில் முலம் துரிதமாக தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுத்தனர்.

மாவட்ட காவல் அலுவலகம் - மயிலாடுதுறை

உடனடி நடவடிக்கையின் பேரில் பண மோசடி செய்து வாங்கப்பட்ட பொருட்கள், மோசடி செய்த நபர்களுக்கு சென்றடையாமல் தடுக்கப்பட்டதுடன், புகார்தாரர் மணிமாறனுக்கு, அவர் இழந்த பணம் இரண்டு தினங்களுக்குள் திரும்பவும் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்க ஆவண செய்யப்பட்டது. இழந்த பணத்தை பெற்றுக் கொண்ட மணிமாறன், தஞ்சாவூர் சரக காவல் துணைத் தலைவர் . ஜியாவுல் ஹக் IPS, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா, மயிலாடுதுறை சைபர் கிரைம் பிரிவு மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் முனைவர் சிவசங்கர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டு சென்றார்.

Money Fraud

எக்காரணத்தைக் கொண்டும் தெரியாத லிங்கை டவுன்லோட் செய்வதை தவிர்க்க வேண்டும். இது போன்ற சைபர் கிரைம் குற்றங்கள் நடந்தால் தாமதிக்காமல் உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும், தாமதமானால் இழந்த பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்படும் என சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.