வெங்கடேசன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

தூக்கத்தில் குளிர்சாதனப் பெட்டியில் தெரியாமல் பட்ட கை! மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த நபர்!

தூக்கத்தில் குளிர் சாதன பெட்டியில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் கேகே நகரில் நடந்துள்ளது.

ஜெ.அன்பரசன்

சென்னையில், தூக்கத்தில் குளிர் சாதன பெட்டியில் கை பட்டதால் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

சென்னை கேகே நகர் கிழக்கு வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (43). வெல்டிங் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு மதுகுடித்துவிட்டு தனது வீட்டினில் ஹாலில் குளிர்சாதன பெட்டியின் அருகே உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது தனது இடது கை தோள்பட்டை குளிர்சாதன பெட்டியின் மீது உரசியதால் அதில் மின்கசிவு ஏற்பட்டு துடிதுடித்து சத்தமாக முனகியுள்ளார்.

வெங்கடேசன்

அவரது மனைவி கிரிஜா காப்பாற்ற முயற்சிக்கும்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. ஆனால், அவர் உடனே சுதாரித்துக் கொண்டு தனது கணவரை மீட்டுள்ளார். சுயநினைவின்றி இருந்த கணவரை கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

மருத்துவரிடம் சோதனை செய்தபோது வெங்கடேசன் வரும் வழியில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து கேகே நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து வெங்கடேசனின் மனைசி கிரிஜா தெரிவிக்கையில், “எப்போதும் படுக்கும் இடத்தில் எனது கணவர் படுத்திருந்தார். நேற்று மது போதையில் களைப்பில் தூங்கியபோது குளிர்சாதன பெட்டியில் தோள்பட்டை பட்டுள்ளது. அதனால் சத்தமாக அவர் முனகினார். என்ன நடந்தது என நான் அவரை எழுப்ப முற்பட்டபோது என் மீதும் மின்சாரம் பாய்ந்தது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சத்தமிட்டுக்கொண்டே அக்கம் பக்கத்தினரை அழைத்து மின்சாரத்தை ஆஃப் செய்துவிட்டு அவரை மருத்துவமனை அழைத்து சென்றதாகவும் ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் கிரிஜா தெரிவித்தார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.