தமிழ்நாடு

காதலிக்க மறுத்த திருமணமான பெண் : பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரன்

webteam

நெய்வேலி அருகே காதலிக்க மறுத்த திருமணமான பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்ல முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வடலூரை சேர்ந்தவர் சலோமி. திருமணமான இவர் தனது குழந்தையுடன் தனியே வசித்து வருகிறார். இவரை தனியார் பேருந்து நடத்துனரான அரசூரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி ஒரு தலையாக காதல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொள்ளாத சலோமி, அவருக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், இன்று வடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் வேலைவாய்ப்பு மையத்திற்கு வந்த சலோமியை வழிமறித்த சுந்தரமூர்த்தி, தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றிக் கொலை செய்ய முயற்சி செய்தார்.

தீப்பற்றியதால் அலறித்துடித்த சலோமியை அப்பகுதியில் இருந்த மக்கள் உடனே மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தப்பி ஓட முயன்ற சுந்தரமூர்த்தியை பிடித்து வடலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த சலோமி, தற்போது கடலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சுந்தரமூர்த்தியை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.