குடிபோதையில் காவலர்களை அவதூறாக பேசிய ஜோடி புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை: “உதயநிதியை இப்போவே கூப்பிடுவேன்.. பார்க்கிறாயா?” - காவலர்களை மிரட்டி, அநாகரீகமாக பேசிய ஜோடி!

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் நள்ளிரவில் நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்குமாறு கூறிய ரோந்து போலீசாரை இழிவாக பேசிய ஜோடியால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெ.அன்பரசன்

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் காரை நிறுத்திவிட்டு, உள்ளே ஒரு ஆணும் பெண்ணும் இருந்துள்ளனர். இதைப்பார்த்த போலீசார், காரை எடுக்கும்படி காருக்குள் இருந்த இருவரிடமும் சொன்னதாகக் கூறப்படுகிறது. அப்போது, ரோந்து போலீசாரை மிக இழிவாக பேசிய அந்த இருவரும், அநாகரீகமாக நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை போலீசார் வீடியோ பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜோடி

அதில், ‘நீங்கள் யார்?’ என்று அந்த ஆண் - பெண்ணிடம் போலீசார் கேட்டதும், இருவரும் போஸ் கொடுத்து கிண்டல் செய்தனர். மேலும் அந்த ஆண், “நான் உதயநிதி ஸ்டாலினை இங்கேயே கூப்பிடுவேன் பார்க்கிறாயா?” என போலீசாரை மிரட்டும் தொணியில் பேசி கேலியும் கிண்டலும் செய்துள்ளார். தொடர்ந்து “உன்னால் முடிந்ததை பாரு” என மிரட்டல் விடுத்த அந்த நபர், “நான் குடித்துதான் இருக்கிறேன். என்னால் வண்டியை எடுக்க முடியாது. நாளை காலை உங்க முகவரி எல்லாத்தையும் எடுத்து உங்களை காலி செய்து விடுவேன்” எனக்கூறியதோடு காரை வட்டமிட்டபடி எடுத்துச் சென்றார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காரில் இருந்த இருவரும் கணவன் மனைவி இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இருவர் குறித்தும் மெரினா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.