bike accident freepik
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: பைக்கில் ஒருவரை ஒருவர் முந்த முயற்சி.. தவறிவிழுந்ததில் கல்லூரி மாணவி உயிரிழப்பு!

PT WEB

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த சிவம்பட்டி ஏரிக்கரை அருகே இரு சக்கர வாகனங்களில் வந்த கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் முந்த முயன்றபோது கீழே விழுந்ததில் பின்னே அமர்ந்திருந்த கல்லூரி மாணவி ஜெயசுதா (19) சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

என்ன நடந்தது?

தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயசுதா (19). தருமபுரியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் பயின்று வந்துள்ளார்.

கல்லூரி மாணவி

இந்நிலையில் மத்தூர் அருகே உள்ள நண்பர்களை சந்திப்பதற்காக தனது கல்லூரி நண்பரான கௌதம் (23) மற்றும் சக நண்பர்களுடன் மூன்று இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின் வீடு திரும்பியபோது சிவம்பட்டி ஏரிக்கரை அருகே நண்பர்கள் ஒருவரை ஒருவர் முந்த முயற்சித்துள்ளனர்.

பைக் விபத்து

அப்போது எதிர்பாராத விதமாக முன்னே சென்ற வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயசுதா தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தோழியை மீட்ட நண்பர்கள் அவரை மத்தூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது பரிசோதித்த மருத்துவர் அவர் முன்பே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மத்தூர் காவல் நிலையம்

இச்சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.