தமிழ்நாடு

ஊராட்சி மன்றத் தலைவி ஆன 22 வயது பட்டதாரி இளம்பெண்

webteam

திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சி மன்றத் தலைவி தேர்தலில் போட்டியிட்டு 22 வயது பிபிஏ பட்டதாரி இளம்பெண் வெற்றி பெற்றுள்ளார்.

திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சியை சேர்ந்தவர் ஆர். சுபிதா(22). இவர் திருவாரூர் திரு.வி.க கல்லூரியில் பிபிஏ பட்டப்படிப்பை கடந்த 2017-ல் முடித்தார்.

இதைத்தொடர்ந்து இவர் பூசலாங்குடி ஊராட்சித் தலைவி பதவிக்கு திமுக கூட்டணியில் இ.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்நிலையில், இவர் வெற்றி பெற்று 22 வயதில் ஊராட்சி மன்றத் தலைவியாகியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தேர்தலில் நிற்க வேண்டும் எனவும் வெற்றி பெற்று ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவ்வப்போது இருந்து வந்தது. அது இன்று நிறைவேறியிருக்கிறது. ஊராட்சிக்கு தேவையான அனைத்து பணிகளையும் முடித்து பொதுமக்கள் பயன் பெற முழு முயற்சி மேற்கொள்வேன்” எனத் தெரிவித்தார். .