Rescued pt desk
தமிழ்நாடு

கும்பக்கரை ஆற்றுப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு - 5 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்பு

webteam

செய்தியாளர்: அருளானந்தம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு கீழ் உள்ள கும்பக்கரை ஆற்றுப் பகுதியில், கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் புரத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் மற்றும் நான்கு பெண்கள் என ஒன்பது பேர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது கும்பக்கரை அருவியில் திடீரென காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில், ஆற்றுப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகளுடன் மறு கரையில் தஞ்சமடைந்துள்ளனர்.

Flood

இதை அறிந்து மறு கரையில் தவித்த குழந்தைகள் மற்றும் பெண்களை பெரியகுளம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கயிறு கட்டி ஆற்றை கடக்க செய்து பத்திரமாக மீட்டனர்.

பின் மீட்கப்பட்டவர்களுக்கு காயங்கள் அல்லது பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்தனர். உரிய சிகிச்சைக்குப் பின்னர் அனைவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.