boat pt desk
தமிழ்நாடு

மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை அட்டூழியம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 9 மீனவர்கள் கைது

webteam

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக வீசி வந்த சூறைக்காற்று காரணமாக மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து 430 விசைப்படகுபளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

Boat

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லைக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஈசாக் ராபின் மற்றும் செல்வகுமார் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகையும் அதிலிருந்த நம்பு, ராதா, ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து காங்கேசன்துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களிடம் முதல்கட்ட விசாரணை நடத்திய பின் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் அனைவரும் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து விசாரணைக்கு பின் மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நேற்று நள்ளிரவு ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்துள்ளனர்.

Boat

இதனால் மீனவர்கள் நாலாபுறமும் சிதறியோடி உள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அந்தோணி தாஸ் என்பவரது படகின் மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகின் பின் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது. படகில் இருந்த மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பி கரை வந்து சேர்ந்தனர்.