தமிழ்நாடு

மகள் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்த 80 வயது மூதாட்டி .. உதவிக்கரம் நீட்டிய பெண் காவலர்.

மகள் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்த 80 வயது மூதாட்டி .. உதவிக்கரம் நீட்டிய பெண் காவலர்.

webteam

80 வயது மூதாட்டியை மகளின் வீட்டிற்கு அனுப்ப, தனது சொந்தச் செலவில் கார் ஏற்பாடு செய்து விமான நிலையத்திற்கு அழைத்து வந்து பாதுகாப்பாக வழிஅனுப்பிய பெண் காவலரை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் பாராட்டி வெகுமதி அளித்தார்.

கடந்த 29.6.2020 அன்று R-1 மாம்பலம் காவல் நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய பெண் ஒருவர், தான் ஐதராபாத்தில் வசித்து வருவதாகவும், தனது தாய் வசந்தா சுப்ரமணியம் சென்னை தி.நகரில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் கொரோனா காரணமாக அவரை இங்கு அழைத்து வர இயலாமல் போன நிலையில், அவருக்கு தற்போது இ - பாஸ் கிடைத்துள்ளதாகவும் அதனால் அவரை விமான நிலையம் அழைத்து வர உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதனையடுத்து மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் அக்காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலை பெண் காவலர் மகாலஷ்மியிடம் விவரத்தை கூறி மூதாட்டிக்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவை ஏற்றுக்கொண்ட பெண் காவலர் ஒன்றாம் தேதி மூதாட்டி வீட்டுக்குச் சென்று, தனது சொந்த செல்வில் தனியார் வாகனம் ஏற்பாடு செய்து விமான நிலையம் வரை அழைத்துச் சென்று பாதுகாப்பாக வழியனுப்பிவைத்துள்ளார். மகளின் வீட்டிற்குச் சென்ற மூதாட்டியும், மகளும் பெண் காவலருக்கு தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்ட மூதாட்டியின் மகள் “நாங்கள் தமிழ்நாடு காவல் துறைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம். பெண் காவலர் மகாலட்சுமிக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கேள்விபட்ட சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் மகாலட்சுமியை நேரில் அழைத்து பாராட்டியதோடு அவருக்கு வெகுமதியும் அளித்துள்ளார்.