வேலூர் மாவட்டம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

வேலூர் | எருக்கம் பால் ஊற்றி கொலை செய்யப்பட்ட பெண் குழந்தை? - ஒன்றும் தெரியாததுபோல் நாடகமாடிய தந்தை!

PT WEB

செய்தியாளர்: ச.குமரவேல்

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பொம்மன்குட்டை பகுதியை சேர்ந்த ஜீவா (30) என்கிற சேட்டு (25) டயானா தம்பதியினர் தங்களின் இரண்டாவதாக பிறந்த குழந்தை பெண் குழந்தை என்பதால் அக்குழந்தையை கொன்று புதைத்துள்ளனர்.

இது தொடர்பாக வேப்பங்குப்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தநிலையில் தலைமறைவாக இருந்த ஜீவா - டயானா மற்றும் ஜீவாவின் தாய் பேபி, சேர்பாடி ஊராட்சி செயலாளர் உமாபதி ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி, குழந்தை பிறப்பதற்கு முன்னரே ஆண் குழந்தைதான் பிறக்கும் என கோவிலுக்கு வேண்டிக் கொண்டு ஆடு, கோழிகளை விலை கொடுத்து வாங்கி பலி (நேர்த்திக்கடன் செலுத்த) கொடுக்க ஜீவா காத்துக் கொண்டிருந்துள்ளார்.

ஆனால், பிறந்ததோ பெண் குழந்தை. இதனால், அதிர்ச்சியும் ஆதங்கமும் அடைந்துள்ளார் ஜீவா. எனவே, அம்மா வீட்டில் இருந்த மனைவி டயானாவை சமைத்துக் கொடுக்க ஆளில்லை என சூசகமாக பேசி தன் வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

பிறகு, குழந்தையை பார்த்ததும் கோபமடைந்த இவர், அனைவரும் உறங்கும் நேரத்தில், பிறந்து எட்டு நாளே ஆன பெண் குழந்தையை வெளியே தூக்கி வந்து வாசலில் இருந்த எருக்கன் செடியை எடுத்து பச்சிளம் குழந்தையை கொலை செய்துள்ளார். மேலும், சந்தேகம் எழக்கூடாது என்பதற்காக, உறங்கிக்கொண்டிருந்த டயானாவின் அருகில் குழந்தையை கொன்று வைத்துள்ளார்.

பின்னர் வெளியே சென்று வந்த ஜீவா,’ குழந்தை ஏன் அழாமல் இருக்கிறது ‘ என கேட்டுள்ளார். பின்னர், தகவல் அறிந்து டயானாவின் பெற்றோரான சரவணன் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் வந்து குழந்தையை தூக்கிப் பார்த்தபோது வாயில் ரத்தம் வந்துள்ளது.

பின்னர்,இது குறித்து சரவணன் தன் மருமகனான ஜீவாவிடம் சத்தம் போட்ட போது ஜீவா சரவணனை அவதூறாக பேசியுள்ளார். இதனால், தனது ஆட்களை அழைத்து வருகிறேன் இரு என சரவணன் கூறி சென்ற இடைவெளியில் யாருக்கும் தெரியாமல் குழந்தையை மண்ணில் புதைத்துள்ளார் ஜீவா.

இந்நிலையில், விசாரணையில் வெளிவந்த இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.