தமிழ்நாடு

நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் மீன்பிடி தடைக் காலம்

webteam

கடலோரப் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குவதால் படகுகளை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

1983-ம் ஆண்டு தமிழ்நாடு கடல்மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் மீன்கள்‌ இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல்‌ ஜூன் 15 வரை 61 நாட்கள் மீனவர்கள் விசைபடகுகள், இழுவைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் தமிழ‌க கடலோரப் பகுதிகளான ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகை, திரு‌வள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மீனவர்கள் கடலுக்கு இன்று முதல் செல்லவில்லை. தமிழகத்திலுள்ள 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 600 விசைப்படகுகளை மீனவர்கள் கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2016 வரை மீன்பிடி தடைக்காலம் 45 நாட்களாக கடைப்பிடித்து வந்த நிலையில், தற்போது 61 நாட்களாக மீன்பிடி தடைக் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இயற்கை மாற்றத்தின் காரணமாக, அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதாலும் மீன்பாடு இல்லாமல் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என மீனவர்கள் ஏற்கெனவே வேதனை தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதால் மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மீ‌ன்பிடித்தடைக் காலத்தில் தமிழக அரசு வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை உயர்த்தி பன்னிரெண்டாயிரம் ரூபாயாக வழங்க வேண்டும் எனவும், மீன்கள்‌ இனப்பெருக்க காலத்தில் விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதைப் போல மோட்டார் பொருத்திய நாட்டு படகுகளுக்கும் அரசு தடை விதிக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.