தமிழ்நாடு

ரயில் விபத்தில் இறந்தவருக்கு வட்டியுடன் சேர்த்து 8 லட்சம் இழப்பீடு

rajakannan

ரயில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு, இழப்பீடு தொகையை வட்டியுடன் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை புறநகர் ரயிலில் ஸ்ரீனிவாசன் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு பயணம் செய்துள்ளார். இதில், சைதாப்பேட்டை மற்றும் மாம்பலம் ஸ்டேஷன்களுக்கு இடையே ரயில் இருந்து தவறி விழுந்து ஸ்ரீனிவாசன் உயிரிழந்துள்ளார். இந்த மரணத்திற்கு இழப்பீடு கோரி ஸ்ரீனிவாசன் குடும்பத்தினர் ரயில்வே தீர்ப்பாயத்தை அணுகியுள்ளனர். ஆனால், ஸ்ரீனிவாசன் ரயிலில் பயணம் செய்ததற்காக ஆதாரம் எதுவும் இல்லை எனக் கூறி இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. 

இதனால், ஸ்ரீனிவாசன் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இந்த வழக்கு சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ8 லட்சத்தை ஸ்ரீனிவாசன் உயிரிழந்த தினத்தில் இருந்து 7.5 சதவீதம் வட்டியும் வழங்க வேண்டும்” என்று நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார். 

விசாரணையின் போது பேசிய நீதிபதி, “ஸ்ரீனிவாசன் குடும்பச் சுமை காரணமாக ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்திருக்கலாம். டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்யும் ஒருவர் பயணி இல்லைதான். ஆனால், ரயிலில் இருந்து தவறி விழுந்த உயிரிழந்த தருணத்தில் பயணம் செய்ததற்காக ஆதாரத்தை தாக்கல் செய்வது சாத்தியமாக இல்லாமலும் இருக்கலாம். சாட்சிகள் மற்றும் சூழ்நிலையில் அடிப்படையில் உயிரிழந்தவர் ரயில் பயணம் செய்தது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

உயிரிழந்த ஸ்ரீனிவாசன் குடும்பத்தினரின் ஆலோசகர் இதுகுறித்து கூறுகையில், “ஸ்ரீனிவாசன் உயிரிழந்த போது அவரது பாக்கெட்டில் இருந்து ரூ2,510 பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.2,510 பாக்கெட்டில் வைத்திருக்கும் ஒருவர், ரூ10 மதிப்பிலான டிக்கெட்டை எப்படி எடுக்காமல் இருப்பார்” என்றார்.