Death pt desk
தமிழ்நாடு

விருதுநகர்: தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி, மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சாத்தூர் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து இருக்கன்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி கார்த்திக். இவர் இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் அன்னதானக் கூடத்தில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும் சம்யுக்தா (5) என்ற குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை குழந்தை சம்யுக்தா, தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தெருவில் உள்ள மின்சார கம்பத்தை பிடித்தபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்.

சம்யுக்தா

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததோடு, குழந்தையை மீட்டு சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த இருக்கன்குடி போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருக்கன்குடியில் விபத்து ஏற்பட்ட மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டு ஷாக் அடிப்பதாக மின்சார ஊழியருக்கு பலமுறை புகார் அளித்தும் மின்சார ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களின் அலட்சியம் காரணமாகவே 5 வயது குழந்தை உயிரிழந்ததாக ஊர் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.