தமிழ்நாடு

படகு கவிழ்ந்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு - அதிகாரிகளின் அலட்சியம் காரணமா?

webteam

குடும்பம் குடும்பமாய் சுற்றுலா சென்ற இடத்தில் உயிர் காக்கும் கருவி வழங்கப்படாமல், 5 வயது சிறுவன் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே காரங்காடு சதுப்பு நிலக் காடுகளை சுற்றிப் பார்ப்பதற்காக உசிலனகோட்டை பகுதியைச் சேர்ந்த 15 பேர் வனத்துறைக்கு சொந்தமான படகில் சென்றனர். அவர்கள் திரும்பி வரும்போது படகோட்டி வேகமாக படகை திருப்பியதால் திடீரென கடலில் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் படகில் இருந்த 15 பேரும் நீரில் தத்தளித்த நிலையில் படகை இயக்கியவர் அவர்களை மீட்க உதவாமல் தப்பிசென்றதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த மீனவர்கள் அனைவரையும் மீட்டு கரை சேர்த்தனர். எனினும் விஸ்வ அஜித் என்ற 5 வயது சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான். படகில் 15 பேர் பயணித்த நிலையில் அதில் ஒருசிலருக்கு மட்டுமே உயிர் காக்கும் life jacket வழங்கப்பட்டதாக படகில் சென்றவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒருவேளை அனைவருக்கும் life jacket வழங்கியிருந்தால் உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது எனவும் கூறுகின்றனர்.

அதிகாரிகளின் அலட்சியதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த விபத்து தொடர்பாக மாவட்ட வன அலுவலரிடம் கேட்டப்போது, 'பயணிகளின் பாதுகாப்பு தான் முக்கியம், போதிய அளவில் உயிர்காப்பு சாதனங்கள் உள்ளதா? என ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்விடம் பேசியப்போது, விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு முழு பாதுகாப்பு உறுதிபடுத்தும் வரை படகு போக்குவரத்து நிறுத்தப்படுவதாகவும் ஆட்சியர் கூறினார்.