தமிழ்நாடு

மீன் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து : 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

webteam

வேப்பூர் அருகே மீன் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார் பாளையத்தை சேர்ந்தவர் தேவநாதன். இவர் தனது குடும்பத்தினர் 8 பேருடன் காரில், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் ஆலயத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது வேப்பூர் சேலம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது இவர்களுக்கு முன்னே சென்ற இருசக்கர வாகனத்தை எதிரே வந்த மீன் லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் தடுமாறிய லாரி கட்டுப்பாட்டை இழந்து தேவநாதன் காரின் மீது மோதியது.

இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் ரேவதி(38), மகள் பவானி (15), உறவினர் பரிமளா (27), மற்றும் நெய்வேலியை சேர்ந்த மீன் லாரி ஓட்டுநர் லேகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணம் செய்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேரும் மீன் லாரியில் வந்த மற்றொரு ஓட்டுநர் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் என 6 பேர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் வேப்பூர், விருத்தாசலம், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு கார் ஓட்டுனர் தேவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.