கொலை வழக்கில் கைதானவர்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை: பழிக்குப் பழியாக அரங்கேறிய கொலை சம்பவம் - தப்பியோடிய 5 பேர் கைது

webteam

செய்தியாளர்: ஆனந்தன்

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் ரவுடி சரத்குமார் (30). இவர் நேற்று வில்லிவாக்கம் மேம்பாலம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 5 மர்ம நபர்கள் அவரை வழிமறித்துள்ளனர்.

அவர்கள் தன்னை கொலை செய்யப்போவதை உணர்ந்த சரத்குமார் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். ஆனால், அவரை துரத்திச் சென்ற மர்ம நபர்கள் பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த சரத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை வழக்கில் கைதானவர்கள்

தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த ராஜமங்கலம் காவல் துறையினர், உயிரிழந்த சரத்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் மாவட்ட காவல் துணை ஆணையாளர் பாண்டியராஜன், விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், குற்றவாளிகள் அனைவரும் வெளியூருக்கு தப்பிச் செல்ல இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து செங்குன்றம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களை காவல் நிலையத்திற்க அழைத்து வந்த விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த நிதீஷ் குமார், யோகேஸ்வரன், பெஞ்சமின், ரத்தினகுமார் மற்றும் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பதும் அவர்கள் சரத்குமாரை கொலை செய்ததும் தெரியவந்தது.

கொலை வழக்கில் கைதானவர்கள்

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கடந்த 2019ஆம் ஆண்டு ஜானகிராமன் என்பவரை கொலை செய்த வழக்கில் சரத்குமார் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

அந்தக் கொலைக்கு பழி தீர்த்துக் கொள்ள ஜானகிராமனின் தம்பி மகன் நிதீஷ் குமார், யோகேஸ்வரன், பிரசாந்த், ரத்தினகுமார், பெஞ்சமின் ஆகியோருடன் இணைந்து சரத்குமாரை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து இவர்கள் ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த ராஜமங்கலம் காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.