தமிழ்நாடு

"நான் நிச்சயம் வருவேன்" - அதிமுக உறுப்பினருடன் சசிகலா பேசும் 4வது ஆடியோ

webteam

சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசியதாக ஏற்கனவே 3 ஆடியோக்கள் வெளியான நிலையில், நான்காவதாக மேலும் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது.

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான பின் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்திருந்தார். இந்நிலையில், அதிமுகவில் உள்ள தமது ஆதரவாளர்களுடன் சசிகலா பேசியதாக அடுத்தடுத்து 3 ஆடியோக்கள் வெளியாகின. ஆனால் சசிகலா அதிமுகவினருடன் பேசவில்லை என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மறுப்பு தெரிவித்தார். ஆதாயத்துக்காகவும் அதிகார போதைக்காகவும் சசிகலா தரப்பினர் முயல்வதாகவும் அது நடக்காது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த ராஜாரகுபதி என்பவருடன் சசிகலா தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. ராஜாரகுபதி அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரமாக, அவரது கட்சி உறுப்பினர் அட்டையும் அதில் இடம் பெற்றுள்ளது. அதில் சசிகலா, "கவலைப்படாமல் இருங்கள் நிச்சயம் நான் வருவேன் என்றும், கட்சியை சரிசெய்துவிடலாம்" என்றும் கூறியிருக்கிறார்.