திண்டுக்கல் மாநகராட்சி pt web
தமிழ்நாடு

புயலை கிளப்பிய திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.66 கோடி பணம் கையாடல் விவகாரம் - தொடங்கியது விசாரணை

PT WEB

ரூ.4.66 கோடி கையாடல்

திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இங்கு குடியிருக்கும் பொது மக்கள் குடிநீர், நிலம், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு வரி இனங்களை மாநகராட்சி வரி செலுத்தும் மையத்தில் செலுத்தி வருகின்றனர்.

இங்கு தினம் தோறும் வசூல் செய்யப்படும் தொகையை கணக்கு பிரிவு அலுவலர்கள் சரிபார்த்து பின்னர் அதனை மறுநாள் வங்கியில் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் மாநகராட்சியில் இளநிலைப்பிரிவு உதவியாளராக இருந்த சரவணன் (36) என்பவர் கடந்த வாரம் போலியாக கையெழுத்திட்டு ரூ.2 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளார். இது குறித்து தெரிய வர அவரிடம் இருந்த பணத்தை அதிகாரிகள் திரும்ப பெற்று சரவணனை சஸ்பெண்டு செய்தனர்.

இதனையடுத்து இளநிலைப்பிரிவு உதவியாளர் சரவணன் பணிக்கு சேர்ந்ததில் இருந்து தற்போது வரை உள்ள கணக்குகளை சரிபார்க்கும்படி ஆணையாளர் ரவிசந்திரன் உத்தரவிட்டார். அவர் 2021ல் இருந்து பணியிலுள்ளார். அதில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து மட்டும் ரூ.4.66 கோடி வரிப்பணத்தை சரவணன் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்

இதனையடுத்து பணம் கையாடல் செய்யப்பட்டதை கண்காணிக்க தவறிய மாநகராட்சி கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதீஷ் ஆகியோரையும் சஸ்பெண்டு செய்து ஆணையாளர் உத்தரவிட்டார். சரவணனின் தந்தை பணிக்காலத்தில் இறந்ததால் கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்த அவர் பல கோடி மோசடியில் ஈடுபட்டது மாநகராட்சி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் மாநகராட்சி வரிப்பணத்தை கையாடல் செய்த சரவணன் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. பிரதீப்பிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி. உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அவர்கள் மாநகராட்சி கணக்கு பிரிவில் வசூலான தொகை மற்றும் ஒவ்வொரு நாளும் வங்கியில் வரவு வைக்கப்பட்ட தொகை மக்கள் செலுத்திய வரி பணம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு விசாரணையை தொடங்கி உள்ளனர்.

”சிபிஐ விசாரணை வேண்டும்” - பாஜக

திண்டுக்கல் 14-வது வார்டு பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் தனபால் கூறும்போது, “திண்டுக்கல் மாநகராட்சி வளர்ச்சிக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நிதிகளை வழங்குகிறது. ஆனால், எந்த ஒரு திட்டங்களும் மாநகராட்சி சார்பாக செய்யப்படுவதில்லை. நிதி பற்றாக்குறை காரணமாகவே பல்வேறு திட்டங்கள் நடைபெறுவதில்லை என திண்டுக்கல் மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், தற்போது மக்களின் வரிப்பணம் ரூ.4.66 கோடியை திண்டுக்கல் மாநகராட்சி கணக்காளர் சரவணன் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கையாடல் செய்ததாக தெரிவிக்கின்றனர். எதையும் முறையாக கவனிக்காமல் திண்டுக்கல் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. எனவே, இதற்கு சிபிஐ-யை விசாரணை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் தான் பணம் கையாடல் செய்த அதிகாரிகள் யார் யார்? எத்தனை நபர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது? என்ற உண்மை தெரிய வரும். மேலும், மக்களின் வரிப்பணத்தை முறைகேடு செய்தது யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார்.

”அரசுக்கே அவப்பெயர்” - சிபிஎம்

திண்டுக்கல் மாநகராட்சி 35வது வார்டு சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஜோதிபாசு கூறும் போது, "நான் திண்டுக்கல் 35 வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும், வரி விதிப்பு மற்றும் நிதி குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறேன். திண்டுக்கல் மாநகராட்சியை பொருத்தவரையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வரி வசூலுக்கு என்று தனியாக கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த ஒரு கூட்டங்களும் நடத்தவில்லை. இதுவரை மூன்று மாநகராட்சி ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

நிரந்தர மாநகராட்சி ஆணையர் நியமிக்கப்பட வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள வீடுகளில் இருந்து மக்களே நேரடியாக வந்து வரி செலுத்துவது வழக்கம். ஆனால், தற்போது இதற்காக அதிகாரிகளை நியமனம் செய்து அவர்கள் நேரடியாக மக்களிடம் வரிப்பணங்களை வசூல் செய்கின்றனர். இதனால் தேவைக்கேற்ப அதிகாரிகள் பணத்தினை வைத்துக்கொண்டு அலுவலகத்தில் முறையாக பணத்தை செலுத்துவதில்லை.

இதுவே பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமாக அமைகிறது. மேலும் திண்டுக்கல் மாநகராட்சியிலுள்ள அதிகாரிகளின் ஆணவப் போக்கால் தமிழ்நாடு அரசு அவ பெயர் உருவாகும் எனவே உடனடியாக தமிழ்நாடு அரசு இதனை கவனிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

ஜோதிபாசு

திண்டுக்கல் மாநகராட்சி நடைபெற்ற முறைகேடு குறித்து திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளம் மதி ஜோதி பிரகாஷ் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டபோது, "4.66 கோடி பணம் கையாடல் குறித்து எஸ் பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அது தொடர்பான ஆவணங்கள் ஆடிட் குழு மூலம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பாக காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். அதன்பின்பே முறைகேடு குறித்து முழுமையாக தெரியவரும். இதுபோன்று வேறு முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை எதுவும் நடைபெறவில்லை" என தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, "திண்டுக்கல் மாநகராட்சியில் முறைகேடு நடந்துள்ளதாக மாநகராட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார்கள் குறித்து முழு ஆவணங்களை கேட்டுள்ளோம் ஆவணங்கள் கிடைத்தவுடன் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.