தமிழ்நாடு

அடித்துக் கொலை செய்யப்பட்ட 4 வயது சிறுவன் - விசாரணை தீவிரம்

Rasus

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு நான்கு வயதில் ஹரிஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக, மனைவி கீதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரைப் பிரிந்து மறவபட்டி பகுதியிலுள்ள பெண் ஒருவரை திருமணம் செய்து முருகன் அங்கேயே குடியேறி உள்ளார்.

கீதாவும் தேவாரம் பகுதியைச் சேர்ந்த உதயன் என்ற நபரை  திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கீதாவின் பெற்றோர் வீடு அருகே குடியேறி வசித்து வருகின்றனர். முருகன், கீதா தம்பதிக்குப் பிறந்த ஹரிஷை கீதாவின் தந்தை மற்றும் அவரது சகோதரி ராஜராஜேஸ்வரி வளர்த்து வந்துள்ளனர்

பெற்றோரின் வீடு அருகே வசித்து வந்ததால் சிறுவன் ஹரிஷ் அவ்வப்போது இரு வீட்டிலும் தங்கிக் கொண்டு அருகே உள்ள  பள்ளி ஒன்றில் ஆரம்ப வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சிறுவன் ஹரிஷ் தெருவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். பின்னர் வெகு நேரமாக வீட்டுக்கு வராத சிறுவனை அவனது சித்தி ராஜராஜேஸ்வரி தேடியுள்ளார். ஆனால் சிறுவன் தெருவில் இல்லாததால் உறவினர்கள் துணை கொண்டு இரவு முழுவதும் சிறுவனைத் தேடி உள்ளனர். இதனையடுத்து சிறுவனைக் காணவில்லை என கோம்பை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

நேற்று மாலை வரை காவல்துறையினர் மற்றும் உறவினர்கள் சிறுவன் ஹரிஷை தேடி வந்த நிலையில், கோம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள மயானம் ஒன்றில் சிறுவன் ஒருவர் இறந்து கிடப்பதை அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்துள்ளனர். முகத்தில் கற்களால் பலமாகத் தாக்கப்பட்டு ரத்த காயத்துடன்  இறந்து கிடந்த அந்தச் சிறுவன் குறித்து உடனடியாக கோம்பை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அது காணாமல்போன ஹரிஷ் என்பதும் தெரியவந்தது.  சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுவனின் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.