தமிழ்நாடு

மின்சார ஊழியர்களின் அலட்சியத்தால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

webteam

4 வயது சிறுவன் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தணிகைபோளூரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது நான்கு வயது மகன் தினேஷ். கடந்த 9ம் தேதி மாலை வீட்டின் முன் இருந்த இரும்பு மின்கம்பம் அருகே விளையாடியக் கொண்டிருந்தபோது, திடீரென மின்சாரம் பாய்ந்து தூக்கி விசப்பட்டார். 

பலந்த காயம் அடைந்த சிறுவன் ஆபத்தான நிலையில் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்கு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி சிறுவன் தினேஷ் இன்று உயிரிழந்தார்.

இதனிடையே கடந்த 9ம் தேதி மின்வாரிய ஊழியர்களின் மெத்தன போக்கை கண்டித்து அரக்கோணம் திருத்தணி சாலையில் தணிகைபோளூரில் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்று மணி நேரம் மேலாக நடந்த மறியல் போராட்டத்தில் அதிகாரிகளின் சமரசத்தை ஏற்று மறியலை கைவிட்டனர். 

இந்நிலையில் மறியலில் ஈடுபட்டதாக கூறி 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மீது தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுவன் இறப்பிற்கு காரணமான மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் மீது காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.