மூதாட்டி கொலை நடந்த மருத்துவமனை pt web
தமிழ்நாடு

மதுரை: அடுத்தடுத்து நடக்கும் மூதாட்டிகள் கொலை.. நகைக்காக கொலை செய்யப்படுகின்றனரா? காவல்துறை விசாரணை

PT WEB

செய்தியாளர் மணிகண்டபிரபு

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 6 தளங்களை கொண்டுள்ள இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனை உணவகத்தில் பணிபுரியும் 70வயது மதிக்கதக்க முதாட்டியான முத்துலெட்சுமி என்பவர் 6ஆவது தளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக மாட்டுத்தாவணி காவல்நிலையத்திற்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் உடலைமீட்டு உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மூதாட்டி அணிந்திருந்த தங்க நகை காணாமல் போன நிலையில் நகையை திருடுவதற்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரையில் பிரதான பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 8ஆம் தேதி மதுரை திருமங்கலம் வாகைக்குளம் மாயன்நகர் பகுதியில் 70 வயது மூதாட்டி காசம்மாள் என்பவர் 65 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று மதுரை மேலூர் கச்சிராயன்பட்டியில் பாப்பு என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்டார். நேற்று முன்தினம் விரகனூர் பகுதியில் தோப்புக்குள் 56 வயதுடைய பெண் ஒருவர் கொலை என ஒரு வாரத்தில் 3 கொலைகள் நடைபெற்ற நிலையில் 4 வதாக ஒரு மூதாட்டி கொலையாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.