வெடிகுண்டு வீசிய வழக்கு pt desk
தமிழ்நாடு

திருவள்ளூர்: திமுக பிரமுகர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு - 4 பேர் ஆந்திராவில் கைது

webteam

செய்தியாளர்: எழில்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் அபிஷா ப்ரியா வர்ஷினி என்பவரின் கணவர் ஜெகன் (38). இவர் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில், நேற்று மாலை ஜெகனின் வீட்டுக்கு 2 இருசக்கர வாகனங்களில் மாஸ்க் அணிந்து வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரது வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

வெடிகுண்டு வீசிய வழக்கு

இதையடுத்து அதே நபர்கள், சிறுனியம் பகுதியில் ஹாலோ பிளாக் கற்கள் மற்றும் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வரும் வெங்கடேசன் என்பவரது மகன்களான சரண்ராஜ் மற்றும் சுந்தர் ஆகியோரது வீட்டுக்குள் புகுந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினர். இதைத் தொடர்ந்து சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லாரிகள் நிறுத்தும் இடத்தில் வெடிகுண்டை வீசி உள்ளது அந்த கும்பல். சத்தம் கேட்டு வெளியே வந்த லாரி ஓட்டுநர் சிவா என்பவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் சோழவரம், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவங்கள் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ரியல் எஸ்டேட் தொழில், கட்டுமான பொருள் சப்ளை செய்வோரிடம் ரவுடிகள் மாமூல் கேட்டு நாட்டு வெடிகுண்டு வீசினார்களா என தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Police station

இதனிடையே இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான பிரபல ரவுடி டியோ கார்த்திக் சுரேஷ், விக்கி உட்பட 4 பேரை ஆந்திராவில் கைது செய்துள்ள தனிப்படை போலீசார், அவர்களை சென்னைக்கு அழைத்து வருகின்றனர். மேலும் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான அஜீத்குமார், நித்தீஸ்வரன் ஆகிய இருவரிடம் சோழவரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.