ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி pt desk
தமிழ்நாடு

ராஜபாளையம்: ஏடிஎம் மையத்தில் 3 வது முறையாக கொள்ளை முயற்சி – அச்சத்தில் பொதுமக்கள்

ராஜபாளையம் பிரதான சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் 3 வது முறையாக கொள்ளை முயற்சி நடந்துள்ள சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

webteam

செய்தியாளர்: K.கருப்பஞானியார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள அழகை நகர் எதிரே கனரா வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. காவலர் இல்லாத இந்த ஏடிஎம் மையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

இது குறித்து அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் உடைக்க முயன்றது தெரிய வந்துள்ளது. கண்காணிப்பு கேமரா கீழ் நோக்கித் திருப்பி வைக்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக ஏடிஎம் மையம் மூடப்பட்டது.

24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் இந்தப் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி மற்றும் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி என இருமுறை கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்த நிலையில், மூன்றாவது முறையாக நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.