சரவணன், சாந்தி pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல் | வசூல் செய்த ரூ 4.66 கோடி வரிப்பணத்தை வாரிச்சுருட்டிய அதிகாரி!

webteam

செய்தியாளர்: காளிராஜன்.த

திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் குடிநீர், நிலம், பாதாள சாக்கடை உள்ளிட்டவற்றிற்கான வரிகளை மாநகராட்சி வரி செலுத்தும் இடத்தில் செலுத்துகின்றனர். இந்த வரிப்பணத்தை கணக்குப் பிரிவு அலுவலர்கள் சரிபார்த்து இரவில் கருவூலத்தில் வைத்து மறுநாள் காலை வங்கியில் செலுத்த வேண்டும்.

Dindigul Corporation

கணக்கு பிரிவு இளநிலை உதவியாளராக திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன் பணியாற்றினார். இவர் ரூ.2 லட்சம் வரிப்பணத்தை வங்கியில் செலுத்தாமல் கையாடல் செய்ததாக அலுவலர்களுக்கு தெரியவந்தது. இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் அவரிடமிருந்து ரூ.2 லட்சத்தை திரும்பப் பெற்று கொண்டு அவரை சஸ்பெண்ட் செய்தது. இதையடுத்து அவர்மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், கமிஷனர் ரவிச்சந்திரன், சரவணன் பணியாற்றிய காலத்திலிருந்து கணக்கு பிரிவு ஆவணங்களை சோதனை நடத்த உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து 2 நாட்களாக மாநகராட்சி கணக்கு பிரிவு அலுவலர்கள் சரவணன், பணிக்கு சேர்ந்த 2021ல் இருந்து தற்போது வரை உள்ள ஆவணங்களை சரிபார்த்தனர். அதில், 2023 ஜூன் -மாதத்தில் இருந்து தற்போது வரை ரூ.4.66 கோடி வரிப்பணத்தை சரவணன், கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து வரிப்பணம் எவ்வளவு வசூல், எவ்வளவு வங்கியில் செலுத்தப்பட்டது என்பதை கண்காணிக்க வேண்டிய கணக்கு பிரிவு கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதீஷ் ஆகியோர் முறையாக பணியாற்றாததால் இருவரையும் சஸ்பெண்ட் செய்து கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

திண்டுக்கல் மாநகராட்சி

இதைத் தொடர்ந்து சரவணனை கைது செய்து அவரிடமிந்து பணத்தை மீட்டு தரக்கோரி மாநகராட்சி நிர்வாகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.