Road blocked pt desk
தமிழ்நாடு

விருதுநகர்: டீக்கடையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது ஜீப் மோதிய விபத்து - 3 பேர் உயிரிழப்பு

webteam

செய்தியாளர்: T.நவநீத கணேஷ்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மண்டபசாலை பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள டீக்கடையின் முன்பு பொதுமக்கள் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சாயல்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற பாஜக கொடி கட்டிய ஜீப், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

Jeep Accident

ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த ஓடிய ஜீப் கடைசியாக மின்கம்பத்தில் மோதி நின்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எம்.ரெட்டியபட்டி காவல் நிலைய போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மதுரை வாலிநோக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தப்பியோடிவர்களை உடனடியாக கைது செய்வோம் என உறுதி அளித்ததை தொடர்ந்து சமாதானமாகி சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி காளிமுத்து (54) மற்றும் விவசாயிகளான விஜயராமன் (53) மூக்கையா (50) ஆகியோர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.