Road accident pt desk
தமிழ்நாடு

தூத்துக்குடி: சாலையை கடக்க முயன்ற ட்ரை சைக்கிள் மீது கார் மோதிய விபத்து - சிறுவன் உட்பட 3 பேர் பலி

webteam

செய்தியாளர்: மணிசங்கர்

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த தங்கம்மா (35), மாரியம்மாள் (66), சதீஷ் (7), சிலம்பரசன் ஆகிய நான்கு பேரும், ட்ரை சைக்கிள் வாகனம் மூலமாக பழைய பேப்பர் பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர்.

அப்படி அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி சண்முகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பழைய பேப்பர், பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து கொண்டு ட்ரை சைக்கிள் மூலமாக தங்கச்சிமடம் சென்றுள்ளனர்.

விபத்து நடந்த இடம்

அப்போது, கீழ சண்முகபுரம் கிராமத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்ற போது கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணி சென்ற சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ட்ரை சைக்கிளில் இருந்த தங்கம்மா, மாரியம்மா, 7 வயது சிறுவன் சதீஷ் உள்ளிட்ட மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த சிலம்பரசன் மற்றும் சொகுசு காரில் பயணித்த கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த செல்வராஜ், ஓட்டுநர் ஜெனித் (29), குமரித்தங்கம் ஆகிய நான்கு பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடம்

இதையடுத்து உயிரிழந்த சிறுவன் உட்பட 3 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள சூரங்குடி காவல்நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.