தமிழ்நாடு

பட்டாசு ஆலை விபத்து: பலியானோரின் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் நிதியுதவி - சீமான் கோரிக்கை

Veeramani

அச்சன்குளம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 இலட்சம் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள அச்சன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 35 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர் எனவும் வெளிவந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெரும் மனவேதனையும் அடைந்தேன். அச்சன்குளம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன். இதுபோன்ற விபத்துகள் இனியும் தொடராமல் இருக்க, தமிழகம் முழுவதும் இருக்கும் பட்டாசு ஆலைகள், பட்டாசு கடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

அச்சன்குளம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 இலட்சம் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் எனவும், அப்பகுதி மக்களுக்குப் பாதுகாப்பான மாற்றுத்தொழில் ஏற்பாடுகளைச் விரைந்து செய்துதர வேண்டுமெனவும் தமிழக அரசைக் கோருகிறேன்.” என தெரிவித்தார்