தமிழ்நாடு

ஊத்துக்கோட்டை: வயிற்றுப்போக்கால் 20 பேர் மருத்துவமனையில் அனுமதி; 2 பேர் உயிரிழப்பு

webteam

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வயிற்றுப்போக்கு காரணமாக 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்தனர்.

பேரண்டூர் கிராமத்தில் வயிற்றுப்போக்கு காரணமாக 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில், முனுசாமி என்ற 50 வயது நபர் உயிரிழந்த நிலையில், ஏழுமலை என்ற 92 வயது முதியவரும் உயிரிழந்தார். இதனால் பேரண்டூர் கிராமத்தில் சுகாதாரத்துறையினர் சுகாதார பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். குடிநீரை காய்ச்சி குடிக்க தண்டோரா மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடைகளில் விற்கப்படும் திண்பண்டங்களால் பாதிப்பு இருக்கலாம் என ஆய்வு நடத்தினர். பேரண்டூர் கிராமத்தில் குடிநீர் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பால் அவதிப்படுவோர் 9514132348 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.