திருப்பூர் முகநூல்
தமிழ்நாடு

திருப்பூர் | மதுபோதையில் ரயிலில் அராஜகம்... தட்டிக் கேட்டவர்களுக்கு மிரட்டல் இறங்கிய இளைஞர்கள்!

PT WEB

சென்னையில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு சென்றுக் கொண்டிருந்த ஆலப்பி விரைவு ரயிலில் நிகழ்ந்த சம்பவம்தான் இது. ஈரோடு ரயில் நிலையத்தில் முன்பதிவு பெட்டியில் ஏறிய இளைஞர்கள் சிலர் கழிவறை வாயிலில் அமர்ந்து புகை பிடித்த படியும், சத்தமாக பாடல்களை பாடியும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்துள்ளனர்.

இதனால் அதிருப்தி அடைந்த பயணிகள், இளைஞர்களிடம் இதுதொடர்பாக கேட்ட போது, மதுபோதையில் இருந்த அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பயணிகளுக்கு மிரட்டல் விடுத்துவிட்டு, திருப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பகிர்ந்த பாதிக்கப்பட்ட ரயில் பயணிகள், நிகழ்வின் போது ரயில்வே காவலர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் என யாரும் உதவ வரவில்லை என வேதனை தெரிவித்தனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட ரயில் பயணிகள் கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவரை கைது செய்த ரயில்வே காவலர்கள், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.