தமிழ்நாடு

‘காதல்.. அடித்து துன்புறுத்தல்..’ - ஐ.ஏ.எஸ் அதிகாரி மகளின் புகாரில் இருவர் கைது

webteam

சென்னையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி மகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகள், வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 12ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அண்ணாநகரைச் சேர்ந்த முகமது ரபி என்பவரின் இரட்டை மகன்களான இர்பான் (21) மற்றும் இம்ரான் (21) ஆகியோர் மீது ஐ.ஏ.எஸ் மகள் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. 

அதில், ‘கடந்த 5 ஆண்டுகளாக பள்ளிப் பருவத்தில் இருந்தே இர்பானை காதலித்து வந்தேன். என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இர்பான் ஏமாற்றினார். இர்பானிடம் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டதற்கு அவரும், அவருடைய சகோதரர் இம்ரானும் ஆபாசமாக பேசியதுடன், அடித்து தாக்கினர்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இர்பானை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தலைமறைவாக இருந்த இம்ரானை காவல்நிலையத்துக்கு அழைத்து வருமாறு அவர்களது பெற்றோரிடம் கூறியிருந்தனர். இந்த நிலையில் நேற்று தலைமறைவாக இருந்த இம்ரானை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இர்பானையும், இம்ரானையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.