உயிரிழந்த தொழிலாளர்கள் pt desk
தமிழ்நாடு

திருநெல்வேலி: திடீரென வெடித்துச் சிதறிய பட்டாசுகள் - விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

webteam

செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்

நாசரேத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் குறிப்பான்குளத்தை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. நேற்று ஒரு கட்டடத்தில் அரசர்குளத்தைச் சேர்ந்த கள்ளவாண்டான் மகன் முத்துகண்ணன் (21), கமுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் விஜய் (25), புளியங்குளத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் செல்வம் (26), செம்பூரைச் சேர்ந்த சுந்தரம் மகன் பிரசாந்த் (26), சின்னமதிகூடலைச் சேர்ந்த செந்தூர்கனி, முத்துமாரி ஆகிய 6 தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் இருந்தனர்.

Police investigate

அப்போது, இவர்கள் இருந்த அறைக்கு அருகே உள்ள அறையில் திடீரென பட்டாசுகள் வெடித்தன. இதில் இருந்து வந்த தீப்பொறிகள் விழுந்ததில் தொழிலாளர்கள் பணியாற்றிய அறையில் இருந்த பட்டாசுகளும் வெடிக்கத் தொடங்கின. இந்த விபத்தில், அறையில் பணியில் இருந்து முத்துகண்ணன், விஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். செல்வம், பிரசாந்த், செந்தூர்கனி, முத்துமாரி ஆகியோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து, நாசரேத் போலீஸாரும், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்த பிரசாந்த், செல்வம் ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், செந்தூர்கனி, முத்துமாரி ஆகியோர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையிலும் சிக்ச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, உயிரிழந்த விஜய், முத்துகண்ணன் ஆகியோரது உடல்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து நாசரேத் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.