தமிழ்நாடு

கோவை: தடுப்பூசி போட்டதால் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக புகார்

webteam

கோவையில், தடுப்பூசி போட்டதால் இரு குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக, கமிட்டி அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை மசக்காளிபாளையம் அருகே வசிக்கும் பிரசாத்- விஜயலட்சுமி தம்பதியின் 2 ஆவது குழந்தையான, மூன்று மாத ஆண்குழந்தைக்கு அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுகாதாரத்துறையால் நடத்தப்பட்ட முகாமில் தடுப்பூசி போடப்பட்டது. பென்டாவேலன்ட், ரோடோவைரஸ் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து குழந்தைக்கு போடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து வீட்டிற்கு சென்ற குழந்தை மயங்கியுள்ளது.

அதனைத்தொடர்ந்து குழந்தை கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டது. அதனைத்தொடர்ந்து தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், உடற்கூராய்வில், நிமோனியா காய்ச்சல் காரணமாக குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.அதேபோல சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த வெற்றிமாறன் என்ற இரண்டரை வயது குழந்தைக்கு மசக்காளிபாளையம் துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அந்தக் குழந்தையும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது.

இது குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலர், “ இந்த விவகாரம் குறித்து, தனி மருத்துவர்கள் குழு விசாரித்து வருகிறது. அவர்களது ஆய்வுக்குப் பின்னரே காரணம் தெரிய வரும்” என்றார்.