தமிழ்நாடு

கைதியின் உறவினரிடம் துப்பாக்கியை கொடுத்துச் சென்றதாக 2 போலீசார் சஸ்பெண்ட்

kaleelrahman

காவலர் துப்பாக்கியுடன் கைதியின் உறவினர் வெளியிட்ட புகைப்படம் இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து விருதுநகர் எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்பரசன், ஆறுமுக வேல் ஆகிய இருவரும் இருக்கன்குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் கிளை சிறையில் இருந்து விசாரணைக்காக ஜான்பாண்டியன் என்ற கைதியை அழைத்துக் கொண்டு துப்பாக்கியுடன் விருதுநகர் நீதிமன்றத்திற்கு சென்றனர்.

அப்போது விருதுநகர் நீதிமன்றத்தில் கைதியை ஆஜர்படுத்தி விட்டு பின்னர் அருகில் உள்ள டீக்கடையில் இரண்டு காவலர்களும் டீ குடிக்க சென்றதாகவும். அப்போது அங்கு வந்த ஜான்பாண்டியனின் உறவினர் ஒருவரிடம் இரண்டு காவலர்களும் துப்பாக்கியை கொடுத்து விட்டு டீ குடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜான் பாண்டியனின் உறவினர் ஒருவர் போலீஸ் துப்பாக்கியுடன் தன்னை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து விருதுநகர் மாவட்ட எஸ்.பி மனோகரன் விசாரணை நடத்தி வெளியாட்களிடம் காவலர் துப்பாக்கியை கொடுத்து அஜாக்கிரதையாக நடந்து கொண்டதற்காக அன்பரசன் மற்றும் ஆறுமுகம் வேல் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.