சேலம் நாடாளுமன்ற தொகுதி முகநூல்
தமிழ்நாடு

சேலம் நாடாளுமன்ற தொகுதி | வாக்களிக்க சென்ற இரு முதியவர்கள் உயிரிழப்பு!

ஜெனிட்டா ரோஸ்லின்

சேலத்தில் மக்களவை தொகுதியை பொறுத்தவரை கோடைக்காலம் தொடங்கிய நாள்முதலே 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பமானது வெளுத்துவாங்கி கொண்டிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, ஒரு வாரகாலமாகவே வெப்பத்தின் அளவு என்பது, 108 டிகிரி செல்சியஸ் என்று பதிவாகியுள்ளது. வெப்பம் அதிகரித்து இருப்பதன் காரணமாக, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இதன்படி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்கின் மூலம் தங்களின் வாக்குகளை செலுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், காலை மாலை நேரங்களில் முதியவர்கள் வாக்களிக்கவர வேண்டும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரண்டு முதியவர்கள் வாக்கு செலுத்த சென்றபோது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சேலம் சூரமங்கலத்தில் 65 வயதான பழனிசாமி என்பவர் வாக்களிக்க சென்றபோது மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, முதியவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்க சென்ற முதியவர்கள் மரணம்

இதேபோல், செங்கவல்லி அருகே 77 வயது மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் வாக்களிக்களிப்பதற்காக வாக்குச்சாவடியில் காத்திருந்தநிலையில், மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வெயில் அதிகரித்து காணப்படும் சேலம் நாடாளுமன்ற தொகுதியில், இது போன்ற விபரீதங்களை தவிர்ப்பதற்காகவே, தேர்தல் ஆணையம் 85 வயது மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் பந்தல் அமைக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக வாக்களித்து செல்லவும் ஏற்பாடு செய்திருந்தது.

போலவே தனி செயலியின்மூலம் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட நபர் இருக்கும் இடத்திற்கே வாகனம் வரவழைக்கப்பட்டு உடனடியாக வாக்கு செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் அந்த வாகனத்திலேயே மீண்டும் வீட்டிற்கு செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், தகவல்கள் அனைத்தும் மக்களை சரிவர சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்டுள்ள இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க உடனடி நடவடிக்கை தேவையாக இருக்கிறது.