ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு pt
தமிழ்நாடு

நெல்லை: கோவிலுக்கு சென்ற 2 மாணவிகளுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் நேர்ந்த துயரம்!

PT WEB

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, நேர்த்தி கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்கின்றனர்.

ஆற்றில் மூழ்கிய 2 மாணவிகள் பலி!

அப்படி சிவகாசியை சேர்ந்த முருகன் என்பவரின் மகள்களான கல்லூரி மாணவி மேனகா (18), பள்ளி மாணவி சோலை ஈஸ்வரி (15) உள்பட சுமார் 25 பேர் ஒரு வேனில் சாமி தரிசனம் செய்ய சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்றுள்ளனர்.

நெல்லை சொரிமுத்தையனார் கோவில்

அங்கு அவர்கள், கோவில் வளாகத்திலுள்ள பட்டவராயன் கோவில் முன் தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது மேனகா மற்றும் சோலை ஈஸ்வரி ஆகிய இருவரும் தாமிரபரணி ஆற்றில் மூழ்கியுள்ளனர். இதைப்பார்த்த அவர்களது சித்தப்பா சங்கரேஸ்வரன் (40) மற்றும் மாரிஸ்வரன் (28) ஆகியோர் இருவரையும் மீட்க ஆற்றில் இறங்கியுள்ளனர். ஆனால் காப்பாற்ற சென்றவர்களும் ஆற்றில் மூழ்கிய நிலையில், அங்கிருந்தவர்கள் மாரிஸ்வரனை மட்டும் பத்திரமாக உயிருடன் மீட்டனர். சங்கரேஸ்வரனை (40) காப்பாற்ற முடியவில்லை.

தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் அம்பை தீயணைப்பு துறையினர் மேனகா, சோலை ஈஸ்வரி மற்றும் சங்கரேஸ்வரன் ஆகிய மூவரையும் சடலமாக மீட்டனர். மூவர் உடலையும் கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..