Accident pt desk
தமிழ்நாடு

புதுக்கோட்டை: இருசக்கர வாகனம் மீது ஆர்டிஓ கார் மோதிய விபத்து - இருவர் பலி

webteam

சேய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் அருகே உள்ள நகரத்துப்பட்டியில் உள்ள திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா தனது அரசு காரில் சென்றுள்ளார். அப்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பைசல் மற்றும் பயாஸ் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

அவர்கள் நகரத்துப்பட்டி அருகே வந்தபோது முன்னால் சென்ற பேருந்தை இவர்கள் முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த வருவாய் கோட்டாட்சியரின் வாகனம் இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Road accident

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பைசல் மற்றும் பயாஸ் ஆகிய இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் வருவாய் கோட்டாட்சியரின் வாகன ஓட்டுனர் காமராஜ் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் புதுக்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்த இருவரது சடலங்களும் திருமயம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து நமணசமுத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய் கோட்டாட்சியரின் வாகனம் மோதி இரண்டு நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.