தமிழ்நாடு

தனியார் கம்பெனி ஊழியரை வெட்டிவிட்டு 20 ஆயிரம் பணம் வழிப்பறி : இருவர் கைது

webteam

சென்னை பாடியில் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு 20 ஆயிரம் பணம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.

அம்பத்தூரை அடுத்த பாடி சீனிவாசநகர், 10-வது தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன்(50). இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 30 ஆம் தேதி இரவு வெங்கட்ராமன் இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

பாடி சி.டி.எச் சாலை, பஸ் நிறுத்தம் அருகே அவர் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் அவரது பாக்கெட்டில் வாடகை கட்ட வைத்திருந்த ரூ.20ஆயிரம் பணத்தையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

படுகாயமடைந்த வெங்கட்ராமன் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். அதன் அடிப்படையில், வழிப்பறியில் ஈடுபட்டது புளியந்தோப்பு பட்டாளம் பகுதியை சேர்ந்த சரவணன்/20, இட்டா விஜி/22 உள்ளிட்ட கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.