வெறி நாய் PT
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் நாய் கடியால் 2.42 லட்சம் பேர் பாதிப்பு; 22 பேர் ரேபிஸ் நோய்க்கு பலி

webteam

செய்தியாளர்: பால வெற்றிவேல்

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 22 வெறிநாய்க்கடி இறப்புகள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் பதிவு செய்த 18 இறப்புகளை விட அதிகம். நாய் கடித்தால் ஏற்படும் குறிப்பிடத்தக்க பொது சுகாதார பிரச்னையை தீவிரமாக கவனத்தில் கொண்டு, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரகம், இப்பிரச்னையை கையாள்வது குறித்து அதிகாரிகளுக்கு தொடர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

street dogs

அதிகாரபூர்வ தரவுகளின்படி, ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 2,42,782 நாய்க்கடி வழக்குகள் மற்றும் 22 ரேபிஸ் இறப்புகள் நடந்துள்ளன. 2023 ஆம் ஆண்டில் மொத்த எண்ணிக்கை 4,41,804 நாய்க்கடி மற்றும் 18 இறப்புகள். இது இந்த விகிதத்தில் தொடர்ந்தால், 2022 இல் பதிவு செய்யப்பட்ட 28 ரேபிஸ் இறப்புகளின் ஐந்தாண்டு உச்சத்தை தாண்டும். இறப்பு எண்ணிக்கையை குறைக்க, ரேபிஸ் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் நகர சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும். எந்த நேரத்திலும் குறைந்தபட்சம் 20 குப்பிகள் ரேபிஸ் தடுப்பூசியை இருப்பு வைத்திருக்க வேண்டும். மேலும் அனைத்து நாய்க்கடி நிகழ்வுகளிலும் தடுப்பூசி வீணாகிவிடும் என்ற கவலையின் காரணமாக தயங்காமல் தடுப்பூசி போடப்பட வேண்டும். இரவு நேரங்களில் கூட ரேபிஸ் தடுப்பூசி போடுவதற்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்று பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

snake bites

பாம்பு கடி சம்பவங்களை பொறுத்தவரை, ஜூன் மாதம் வரை தமிழகத்தில் 7,310 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2023 இல் 19,795 சம்பவங்கள் பதிவாகி இருந்தன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக சுகாதார நிலையங்களில் பாம்பு விஷம் எதிர்ப்பு மருந்து இருப்பதை உறுதி செய்ய சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எந்த நேரத்திலும் குறைந்தபட்சம் 10 குப்பி பாம்பு விஷம் எதிர்ப்பு மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று இயக்குநரகம் அறிவுறுத்தியது.

பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு இந்த மையங்களுக்கு வருபவர்களை மூன்றாம் நிலை பராமரிப்பு வசதிகளுக்கு அனுப்புவதற்கு முன் தடுப்பூசி போடப்பட வேண்டும். எதிர்ப்பு மருந்து வழங்குவதற்கு முன், பரிசோதனை டோஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.