தென்காசி புதிய தலைமுறை
தமிழ்நாடு

கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக வந்த காட்டாற்று வெள்ளம்.. துடிதுடித்து உயிர் போகும் அந்தக் காட்சி!

PT WEB

செய்தியாளர்:சுந்தரமகேஷ்

பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இதன் எதிரொலியாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

கோடை விடுமுறை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது. பழைய குற்றாலம் அருவியில் நூற்றுக்கணக்கானோர் குளித்துக் கொண்டிருந்தனர். பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என பலரும் அருவியின் அருகே நின்றிருந்தனர். அப்போது, திடீரென அருவியில் காட்டாற்று வெள்ளம் கொட்டியது. எதிர்பாராத வெள்ளப்பெருக்கால் அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள்.

அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். எனினும், குளிக்கும் பகுதியில் இருக்கும் கம்பிகளில் பலர் சிக்கிக் கொண்டனர். சிலர் வெள்ளப்பெருக்கில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனைக் கண்ட வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் என பலரும் உடனடியாக களத்தில் இறங்கி சுற்றுலாப் பயணிகளை பேராபத்தில் இருந்து மீட்டனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டபோதும், நெல்லையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அஸ்வின் மாயமானான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் மாயமான சிறுவனை தேடினர். மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் ஆகியோரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். தீயணைப்புத் துறையினரின் தீவிர போராட்டத்திற்கு பிறகும் சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை.

2 மணி நேரத்திற்கும் மேலான தேடுதலுக்கு பிறகு சிறுவன் அஸ்வின் சடலமாக மீட்கப்பட்டான். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கமல் கிஷோர், ”அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க சிறப்பு திட்டம் கொண்டுவரப்படும். ” என்றார். இதனிடையே, தொடர் கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகள், அணை பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொது மக்கள் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.