துக்க வீட்டில் வெடிவிபத்து புதிய தலைமுறை
தமிழ்நாடு

ராணிப்பேட்டை | இறுதிச்சடங்கில் பட்டாசு வெடித்தபோது விபத்து; 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

PT WEB

செய்தியாளர் - நாராயணசாமி

ராணிப்பேட்டை ஆர் ஆர் சாலையில் உள்ள பட்டாணிக்கார தெருவில் வயது மூப்பு காரணமாக சரஸ்வதி என்பவர் இறந்துவிட்டார். அவரது துக்க நிகழ்வில் அவரது உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உயிரிழந்த மூதாட்டி சரஸ்வதி

இந்நிலையில், சரஸ்வதியின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் வெடிப்பதற்காக பட்டாசு வாங்கி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது வேறு ஒரு இடத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசின் தீ பொறி, குவியலாக மற்றொரு இடத்தில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசின் மீது பட்டுள்ளது. இதில், இந்தப் பட்டாசுகள் படபடவென வெடித்துச் சிதறின. அப்போது அங்கிருந்த பரமேஸ்வரி (65), சரவணன் (50), பார்த்திபன் (27), காவியா (27), பாரதி (41), பிரேமா (70) ஆகியோர் உட்பட மொத்தம் 12 பேர் காயமடைந்தனர்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் காயப்பட்டவர்களை மீட்டு வாலாஜா தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீக்காயம் பட்ட அனைவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

வாலாஜா தலைமை அரசு மருத்துவமனை

இது தொடர்பாக ராணிப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காயப்பட்டவர்களை மாவட்ட ஆட்சியர் வளர்மதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த பட்டாசு வெடிப்பு சம்பவம் ராணிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.