தமிழ்நாடு

புதுக்கோட்டை: தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நிவேதா ஜெகராஜா

தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுவன் புகழேந்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முன்னதாக கடந்த டிச.30ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைப்பட்டியில் காவல்துறைக்கு சொந்தமான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில், மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பயிற்சி மையத்திலிருந்து வெளியேறும் துப்பாக்கிக் குண்டுகள் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பசுமலைப்பட்டி கிராமத்தில் அவ்வப்போது விழும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கொத்தமங்கலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் புகழேந்தி, அரையாண்டு விடுமுறைக்காக பசுமலைப்பட்டியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். பாட்டி வீட்டில் சிறுவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, வீட்டின் கூரையை துளைத்த குண்டு சிறுவனின் தலையில் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவன், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் துப்பாக்கிக் குண்டு சிறுவனின் மூளைக்குள் சென்று பக்கவாட்டில் இருப்பதாகக் கூறி, அறுவை சிகிச்சை மூலம் குண்டை அகற்ற தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, தஞ்சை அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுமார் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் தலையிலிருந்த குண்டு அகற்றப்பட்டது. என்றபோதிலும் துப்பாக்கிக் குண்டு ஏற்படுத்திய தாக்கம் சிறுவனுக்கு சரியாகவில்லை. தொடர்ந்து தீவிர சிகிச்சை சிறுவனுக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சிறுவன் விவகாரத்தில் அரசு மௌனம் காப்பது ஏன் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தும், எவ்வாறு இந்த சம்பவம் நடந்தது என்பதை அரசு தெளிவு படுத்த வேண்டியும் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் கொத்தமங்கலபட்டி எனுமிடத்தில் அவரது உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.