மாயமான லிவின் ராஜ் புதியதலைமுறை
தமிழ்நாடு

தனுஷ்கோடி கடலில் குளித்துக்கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவன் மாயம்.. தொடர்ந்து தேடும் போலீஸ்

PT WEB

திருப்பூர் மாவட்டம் கூத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உல்லாஸ். இவரது மகன் லிவின் ராஜ் (14) பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். லிவின் ராஜ் திருப்பூரில் உள்ள மோகன் டியூஷன் சென்டரில் மாலை நேரம் டியூசன் வகுப்பிற்கு சென்று வருகிறார். அவரது டியூஷன் சென்டரில் இருந்து 30 மாணவர்களுடன் கடந்த 27ம் தேதி பேருந்தில் சுற்றுலாவுக்கு புறப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி, திருச்செந்தூர் மாவட்டங்களுக்கு சுற்றுலா சென்று விட்டு, நேற்று காலை ராமேஸ்வரம் சென்றுள்ளனர். அப்போது ராமேஸ்வரத்தை சுற்றியுள்ள பகுதிகளை பார்த்துவிட்டு, மதிய நேரத்தில் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு சென்று ஆபத்தை உணராமல் கடல் பகுதியில் இறங்கி மாணவர்கள் குளித்துள்ளனர். அப்போது மாணவன் லிவின் ராஜ் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். இதையடுத்து உடன் குளித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெகு நேரம் தேடியுள்ளனர். நிவின் ராஜ் கிடைக்காததால், உடன் வந்திருந்தவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் ராமேஸ்வரம் மரைன் சார்பு ஆய்வாளர் காளிதாஸ் தலைமையிலான மரைன் போலீசார் அரிச்சல் முனை வடக்கு கடல் பகுதி முழுவதும் தேடினர். வெகுநேரம் ஆகியும் மாணவர் குறித்து எந்தவிதமான தகவல் இல்லாததால் ராமேஸ்வரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் மாணவன் மாயமான கடல் பகுதியில் மாலை வரை தொடர்ந்து தேடினர். மாணவன் கிடைக்காததால், இன்றும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மாணவன் லிவின் ராஜ் கடலில் மூழ்கிய மாயமானது குறித்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தனுஷ்கோடி கடல் வழக்கத்திற்கு மாறாக சற்று சீற்றமாக இருப்பதால் தனுஷ்கோடி கடலில் குளித்த கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்குமாறு அறிவுறுத்திய போலீசார், கடலில் குளித்த கொண்டிருந்தவர்களை கரைக்கு அழைத்தனர். சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் மாணவன் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது மாயமான நிகழ்வு சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது