தமிழ்நாடு

“ஓய்வு வழங்காமல் பணி செய்ய வற்புறுத்துகின்றனர்”- 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்

webteam

வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து பணிபுரிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து பெரியமேடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுக்குள் வைக்க மாநில அரசு தொடர்ந்து பல்வேறு கட்ட முடிவுகளை எடுத்து வருகிறது. மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளும், மருத்துவ பணியாளர்களும், காவல்துறையினரும் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் அடங்குவர்.

இந்நிலையில், 26 நாட்கள் பணி செய்தால் போதுமெனக் கூறி சென்னை அழைத்து வந்து விட்டு தற்போது முறையான உணவு, ஓய்வு வழங்கப்படாமல் பணிபுரிய கட்டாயப்படுத்துவதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தங்களை சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணியைப் புறக்கணித்து பெரியமேடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மேலாளர் 3 தினங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக்கூறி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்