தமிழ்நாடு

வேளாங்கண்ணி: விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தரமற்ற 100 கிலோ மீன்கள் பறிமுதல்

நிவேதா ஜெகராஜா

வேளாங்கண்ணியில் தரமற்ற அழுகிய 100 கிலோ மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை விற்பனை செய்த 10 கடைகளுக்கு 10 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவதுண்டு. அவர்களுக்காகவே வேளாங்கண்ணி பேருந்து நிலையம் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரை ஓரங்களில் ஏராளமான வறுவல் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

மிகப்பிரபலமான இடமான அங்கு, தற்போதெல்லாம் தரமற்ற அழுகிய, உபயோக பயன்படுத்த முடியாத மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய புகார் சமீபத்தில் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் 6 நபர்கள் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணி கடற்கரை வரை இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் கடைகளில் விற்பனை செய்யப்படும் மீன்களில், தரமற்ற - அழுகிய - நீண்ட நாட்கள் ஆன பழைய மீன்கள் மற்றும் கலர் அதிகம் சேர்த்த மீன்கள் என 10-க்கும் மேற்பட்ட கடைகளில் வைக்கப்பட்டிருந்த தரமற்ற சுமார் 100 கிலோ மீன்கள் மற்றும் இறைச்சிகளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் கடை ஒன்றுக்கு 10 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் அபராதம் விதித்து உரிமையாளர்களை எச்சரித்தனர். வேளாங்கண்ணியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்திய சம்பவத்தில், 100 கிலோ தரமற்ற மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

- செய்தியாளர்: விஷ்ணுவர்த்தன்