Iniya pt desk
தமிழ்நாடு

"இனியாவின் சிறுகதைகள்” – ஆங்கிலத்தில் நீதிக்கதைகள் புத்தகம் எழுதி அசத்திய 10 வயது தஞ்சை சிறுமி!

webteam

செய்தியாளர்: ந.காதர்உசேன்

தஞ்சாவூர் ஜேஜே நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன் - ரேவதி தம்பதியர். இவர்களது ஒரே மகள் இனியா (10), தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். குழந்தை பருவத்தில் இருந்தே சுட்டிக் குழந்தையாக இருந்த இனியா, தனது தாயிடம் கதை கேட்பதில் ஆர்வமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், ஆங்கில பள்ளியில் படித்த இனியா, ஆங்கில நீதிக் கதைகள் மீது ஆர்வமாக இருப்பதை அறிந்த தாய் ரேவதி, கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் நீதிக்கதை நூல்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.

Iniya

இந்நிலையில், அதனை ஆர்வமுடன் படித்த இனியா, புத்தகம் எழுத ஆர்வமுடன் இருப்பதை அறிந்த பெற்றோர் இனியாவிடம் உனக்குத் தோன்றிய கதைகளை எழுது நன்றாக வந்தால் புத்தகமாக போடலாம் என்று கூறியுள்ளனர். அடுத்த சில மாதங்களிலேயே 12 நீதிக் கதைகளை எழுதியதோடு அந்தந்த கதைகளுக்கான ஓவியங்களையும் அவரே வரைந்துள்ளார்.

இதையடுத்து நீதிக் கதைகள் நன்றாக வந்ததால் இனியாவின் பெற்றோர், "இனியாவின் சிறுகதைகள் எனும் தலைப்பில் 12 நீதிக் கதைகள் கொண்ட 24 பக்க ஆங்கில நூலை வடிவமைத்துள்ளனர். 10 வயது சிறுமி ஆங்கிலத்தில் நீதிக் கதைகளை எழுதி சாதனை புரிந்ததை இனியாவின் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.