பாதிக்கப்பட்ட சிறுவன், மற்றும் பாட்டி pt web
தமிழ்நாடு

மதுரை அரசு மருத்துவமனை | “முதல்வர் திறந்துவைத்த பின்னும் பயன்பாட்டுக்கு வரலை”- அல்லல்படும் நோயாளிகள்

PT WEB

செய்தியாளர்: பிரசன்ன வெங்கடேஷ்

அரசு மருத்துவமனையில் சரியாக பார்க்கவில்லை

மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பத்து வயது சிறுவனொருவன், கடந்த 4 ஆண்டுகளாக முறையான சிகிச்சை கிடைக்காமல் அவதியுற்று வருகிறார்.

இதன் பின்னணியில், மதுரை அரசு மருத்துவமனையில் 313 கோடியே 25 இலட்­சம் ரூபாய் செலவில் புதிய டவர் பிளாக் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு நான்கு மாதங்களாகியும், அங்கு மருத்துவர்கள் உட்பட 779 மருத்துவப் பணியாளர்கள் இன்னும் பணியமர்த்தப்படாதது சொல்லப்படுகிறது. இச்சிறுவனை போலவே, தென் தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் உரிய சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்து வருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

காணொளி வாயிலாக மதுரை அரசு மருத்துவமனையில் புதிய டவர் பிளாக்கை முதல்வர் திறந்து வைத்த காட்சி

அவதியில் மதுரை சிறுவன்...

மதுரை அனுப்பானடி சிறுவனை பொறுத்தவரை, அவரது தாய் உயிரிழந்துவிட்டார். தந்தையோ மகனை கைவிட்டுவிட்டு சென்றுவிட்டார். தற்பொழுது தன் சகோதரனுடன் பாட்டி ராமுவின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் அச்சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டிய நிலை உள்ளது.

கண் பார்வை மங்கிப்போன பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வரும் அந்த 10 வயது சிறுவன், இதய நோயால் அவதியுற்று பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இந்த சிறுவனுக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை என்றும், தனியாருக்குச் சென்று சிகிச்சை பார்க்கும் அளவுக்கு வசதி இல்லை என்றும் கூறுகிறார் பாட்டி.

பாதிக்கப்பட்ட சிறுவனின் பாட்டி

சிறுவனின் பாட்டி இதுதொடர்பாக கூறுகையில், “நான்கு வருடங்களாக மதுரை அரசு மருத்துவமனையில்தான் பார்த்துவருகிறேன். அவர்கள் சரியாக பார்க்கவில்லை. அதன்பின் வீட்டில் வைத்திருந்து தனியார் மருத்துவமனையில் பார்த்து வருகிறோம். மேற்கொண்டு தனியாரில் மருத்துவம் பார்க்க என்னிடம் பணம் இல்லை. அரசாங்கம்தான் என் பேரனைக் காப்பாற்றிக் கொடுக்க வேண்டும்.

அலட்சியமாக பதில் சொன்ன மருத்துவர்கள்

மதுரை அரசு மருத்துவமனையில் ‘அறுவை சிகிச்சை செய்ய 20 வயதாக வேண்டும், இப்போது செய்ய முடியாது, தாங்கும் சக்தி வேண்டும்’ என்றனர். அதற்கு, ‘நான் இருக்கும்போதே செய்துவிடுங்கள். நானும் இல்லையென்றால், தாய் தகப்பன் இல்லாமல் பார்ப்பதற்கும் யாரும் இல்லை’ என சொன்னேன்.

அதற்கு அவர்களோ ‘ரெண்டாக கிழித்துபோட சொல்றியா பாட்டி?’ என கேட்டார்கள். அதன்பின் நான் எதுவும் சொல்லவில்லை.

பாதிக்கப்பட்ட சிறுவனின் பாட்டி

மாத்திரைகளை மட்டும்தான் எழுதி கொடுக்கிறார்கள். 10 மாத்திரைகள்தான் கொடுக்கின்றனர். என் பேரனைக் காப்பாற்ற வேண்டும் என ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு திரிகின்றோம். அரசு ஏதாவது செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சிறுவனின் சகோதரரும் வேலைக்கு செல்லும் நிலை

குடும்ப வருமானத்திற்காக இந்த 10 வயது சிறுவனின் உடன் பிறந்த சகோதரரும் எட்டாம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு இரும்பு பட்டறையில் வேலைக்கு செல்கிறார். தனியார் மருத்துவமனையில் இந்த மாணவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதற்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் என சொல்லப்படுகிறது. அந்த வசதி இல்லாததால் அரசு மருத்துவமனையை கதியென பாட்டியும் பேரனும் சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் வீடு

மதுரை அரசு மருத்துவமனையில் புதிய டவர் பிளாக் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்டும் செயல்பாட்டுக்கு வராததால் இந்தச் சிறுவனைபோல் பலரும் இதே நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற முடியாமல் பரிதவித்து வருவதாக கூறுவதாக கூறப்படுகிறது.

பயன்பாட்டுக்கு வராத டவர் பிளாக்.... RTI மூலம் தெரியவந்த அதிர்ச்சி தகவல்கள்!

மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் என்பவர் அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் “அரசு ராஜாஜி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மற்றும் புதிதாக கட்டமைக்கப்பட்ட புதிய டவர் பிளாக் அடுக்குமாடி கட்டடத்தில் மருத்துவர்கள் உட்பட மொத்தம் எத்தனை பணியாளர்கள் பணி புரிகிறார்கள்? தற்பொழுது எவ்வளவு பணிகள் நிரப்பப்படாமல் உள்ளது?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

மதுரை அரசு மருத்துவமனை

இதற்கு மருத்துவமனை நிர்வாகம்,

“அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட 21 துறையைச் சார்ந்த மருத்துவ பணியாளர்கள் மொத்தம் 1973 நபர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால் தற்பொழுது 1446 பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள் என மொத்தம் 527 பணியாளர்கள் பணி இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.

இதில் குறிப்பாக 315 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டமைக்கப்பட்ட டவர் பிளாக் கட்டடத்தில் மட்டும் மருத்துவர் உட்பட சுமார் 779 மருத்துவ பணியாளர்களின் காலி பணியிடம் உள்ளது” என பதில் அளித்துள்ளது.

புதிய ப்ளாக்கின் சிறப்புகள் என்னென்ன?

  • அதிதீவிரமான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்கு அலைகழிக்கப்படுவதைத் தவிர்க்ககூடிய வகையில் ஒரே கட்டிடத்தில் 23 அறுவை சிகிச்சை தியேட்டர்கள் இங்கு உள்ளன.

  • மேலும் புதிய சிகிச்சை அறைகள், அதிநவீன மருத்துவ கருவிகள் என சர்வதேச தரத்தில் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதிதாக டவர் ப்ளாக் திறந்து வைக்கப்பட்ட போது...
  • இங்கு கேத் லேப் மற்றும் இதய அறுவை சிகிச்சைக்கான நவீன வசதிகள், எண்டோஸ்கோபி, லேப்ராஸ்கோபி, அல்ட்ராசவுண்ட் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே வசதிகளும் உள்ளன

இப்படியான டவர் ப்ளாக் பயன்பாட்டுக்கு வந்தால், அனைவரும் பயன்பெறலாம் என மக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், பல பணியாளர்கள் பணியமர்த்த படாமல் உள்ளனர். இதனால் உரிய நேரத்தில் உரிய சிகிச்சை பெற முடியாமல் குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரும் பரிதவித்து வருகிறார்கள்.