தமிழ்நாடு

''நீதிமன்ற‌ தீர்ப்பை கர்நாடகா மதித்த வரலாறே இல்லை'' - முதலமைச்சர் பழனிசாமி

webteam

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால், தமிழகம் பாலைவனமாகும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதற்கான ஆரம்ப பணிகளும் தொடங்கிவிட்டன. இதனை எதிர்த்து நேற்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதிமுகவும், தமிழக அரசும் மேகதாது அணையை கடுமையாக எதிர்த்துள்ளது. இதுதவிர தமிழக எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. ஆனால் கர்நாடக அரசு மேகதாது அணை தமிழகத்திற்கே நன்மை பயக்கும் எனக்கூறியுள்ளது. இதுதொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு நேற்றிரவு பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி, காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை கூட கர்நாடகா இதுவரை ஏற்றதில்லை என பட்டியலிட்டார். காவிரி நீரை நம்பியே தமிழகத்தில் 20 மாவட்டங்கள் உள்ளதை குறிப்ப‌ட்ட முதல்வர், மேகதாது அணை கட்டி அதில் ‌67 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா தேக்கினால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் சூழல் உருவாகும் என்றார். அணைகளிலல் போதிய தண்ணீர் இருந்தபோதே தமிழகத்திற்கு நீர் தராத கர்நாடகா, மேகதாது அணை கட்டியப்பின் மட்டும் எப்படி நீர் தரும் என அவர் கேள்வி எழுப்பினார். 

மேலும், காவிரி விவகாரத்தை‌ பொறுத்தவரை உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதித்ததாக வரலாறே இல்லை என்றும் விமர்சித்தார். 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறிய முதல்வர், மாநிலத்தின் பிரச்னைகள் அடிப்படையில் முடிவுகள் வந்திருப்பதாகவும், நாடாளுமன்றத்தை பொறுத்தவரை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் என்றும் அவர் பதலளித்தார்.