தமிழ்நாடு

மதுரை: ’புத்தக தாத்தா’ என்று அன்போடு அழைக்கப்பட்ட முருகேசன் உடல்நலக்குறைவால் காலமானார்

Sinekadhara

'புத்தக தாத்தா' என்று அன்புடன் அழைக்கப்பட்ட முருகேசன் சற்று முன்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்‌ உடல்நலக்குறைவால் காலமானார்.

மதுரையைச் சேர்ந்த முருகேசன் அனைவரும் புத்தக தாத்தா என்று அன்புடன் அழைப்பர். படிப்பு வாசனையே அறியாத முருகேசனின் உதவியால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா? 25 ஆயிரம் அரிய புத்தகங்களை சேகரித்து வைத்திருந்த முருகேசனால், எந்தப் புத்தகத்தில் என்ன செய்தி இருக்கிறது என தெளிவாகச் சொல்லமுடியும். இன்று, நேற்றல்ல... 35 வருடங்களாக புத்தகங்களை சுமந்து திரிந்தவர் முருகேசன். தென் மாவட்ட ஆய்வு மாணவர்களுக்கு முருகேசன்தான் ஏந்தல். ‘‘தாத்தா... இந்தத் தலைப்பில் ஆய்வு செய்கிறேன்’’ என்று சொன்னால் போதுமாம்.

எங்குதான் சேகரிப்பாரோ, அது தொடர்பான மொத்த புத்தகங்களையும் கொண்டுவந்து சேர்த்துவிடுவாராம். தேவை தீர்ந்ததும் மீண்டும் சேகரித்துக் கொள்வாராம். ஆனால் இதற்கு கட்டணம் ஏதும் வசூலித்தது இல்லையாம். மாணவர்களாக விரும்பி ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்வாராம் தமிழுக்கு தான் செய்வது மிகப்பெரிய சேவை என்பது தெரியாமலே செய்து கொண்டிருந்த இவர், சற்று முன்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்‌ உடல்நல குறைவால் காலமானார்.