தமிழ்நாடு

“திமுக அறக்கட்டளை அறங்காவலரா?; நிரூபித்தால் பாஜகவில் இணைகிறேன்” - உதயநிதி

webteam

தன்னை திமுக அறக்கட்டளை அறங்காவலர் என நிரூபித்தால் பாஜகவில் இணைவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். சில சமயங்களில் திமுக நிர்வாகிகள் எங்காவது தவறு செய்து, அது ட்விட்டரில் ட்ரெண்டானால் அதற்கு வருத்தம் கேட்கவும் அவர் தயங்குவதில்லை. ஒருமுறை திமுக மேடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்றில், உதயநிதி புகைப்படம் ஒன்று தலைவர்கள் வரிசையில் இடம் பெற்றிருந்ததற்கு, ட்விட்டரில் பலர் கேள்விகளை எழுப்பியிருந்தனர். அப்போது இனிமேல் இந்தத் தவறு நடக்காது என்றும், தவறுக்கு வருந்துவதாகவும் உதயநிதி தெரிவித்திருந்தார். இவ்வாறு சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு நெட்டிசன் பாஜக தலைவர்களின் வாரிசுகள் அக்கட்சியில் பதவி வகிப்பதை குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதற்கு பாஜகவின் மாநில இளைஞர் அணி துணைத்தலைவர் எஸ்.ஜி. சூர்யா ஒரு பதிலை பதிவு செய்துள்ளார். அதில், “பாஜகவில் யாரும் எந்த வித பரிந்துரையும் இன்றி தலைவர் ஆகியவர்கள். அனைத்து எம்.எல்.ஏ., மற்றும் எம்.பிக்களும் அப்படித்தான். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி போன்றோ அல்லது ராஜிவ், சோனியா, ராகுல் போன்றோ என குடும்ப ரீதியில் வந்து கட்சியை கட்டுப்படுத்தவில்லை. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு” எனத் தெரிவித்துள்ளார். அத்துடன், திமுக அறக்கட்டளையின் அறங்காவலராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு, அவர் கோடானு கோடிகளை நிர்வகிப்பதை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இந்தக் குற்றச்சாட்டு புதியதுதான்” எனத் தெரிவித்துள்ளார். 

இதற்கு பதிலளித்துள்ள உதயநிதி, “நான் திமுக அறக்கட்டளையின் அறங்காவலர் என நீங்கள் நிரூபித்தால், நான் பாஜகவில் இணைவது என்ற மோசமான தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.